காதல் எவ்வளவு விசித்திரமானது என்பதற்கு சாட்சியாக அடிக்கடி பல சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
யாழில் நேற்று (14) பதிவாகிய இரண்டு மரணங்களை தொடர்ந்து சமூகத்தில் பரவிய வதந்திகள், ஊகங்களிற்கு அப்பால், இந்த விவகாரம் தொடர்பில் வெளியாகும் தகவல்கள்- மற்றொரு விசித்திர காதல் கதையா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பிரபல நகைக்கடை உரிமையாளரும், இளம் பெண் பணியாளரும் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரத்தின் பின்னணியில் “தூய காதல்” விவகாரமே இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
யாழ் நகரிலுள்ள சந்தோஷ், நியூ மைதிலி நகைகடைகளின் உரிமையாளரான நடராசா கஜேந்திரன் (44) என்பவரும், அங்கு பணியாற்றிய செல்வராசா நிலக்சனா (21) என்ற யுவதியுமே தற்கொலை செய்து கொண்டனர்.
மண்பிட்டி, நாவாந்துறையை சேர்ந்தவர் நிலக்சனா. நேற்று மதியம் 12 மணிக்கு அண்மித்த நேரத்தில் நிலக்சனா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்த தகவலறிந்ததும், நகைக்கடையிலிருந்து மதிய உணவிற்காக உரிமையாளர் புறப்பட்டு சென்றார்.
நாவலர் வீதி, ஆனைப்பந்தியிலுள்ள தனது வீட்டில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமான ஒருவர், தனது மனைவி, பிள்ளைகளை தவிர்த்து விட்டு, தனது பாதி வயதான – பலவீனமான பொருளாதார பின்னணியுடைய – உலக சூட்சுமங்கள் அறியாத பராயமுடைய இளம் பெண்ணுடன் காதல் வசப்படலாமா என்ற கேள்விகளிலுள்ள நியாயத்தன்மைகளும் புரிந்து கொள்ளக்கூடியதே.
ஆனால் அவை இன்னொரு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை.
ஆனால், நீண்ட வயது இடைவெளியில் காதல் மலர்வது உலகின் ஆச்சரியமான சங்கதியல்ல.
அதனால், இருவருக்குள்ளும் காதல் விவகாரம் இருந்திருந்தால் அது ஆச்சரியப்பட வேண்டிய, அதிர்ச்சியடைய வேண்டிய விவகாரமல்ல.
நகைக்கடை உரிமையாளரும், பணியாளரும் சிறிய இடைவெளிக்குள் தற்கொலை செய்தது, இரண்டு வெவ்வேறு தனிப்பட்ட சம்பவங்கள் என கருத வாய்ப்பு குறைவென்பதால், இந்த தற்கொலைகள் சமூகத்தில் நிறைய விவாதங்களை தூண்டியிருந்தன.
இந்த விவாதங்கள், பல தவறான தகவல்களையும், வதந்திகளையும் பரப்ப வழியேற்படுத்தியது.
உயிரிழந்த இருவருக்குமிடையிலான உறவை, தவறான திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாகவும் சித்தரித்து பல தகவல்கள் வெளியாகின. அப்படியே பலரும் பேசினார்கள்.
உயிரிழந்த இருவருக்குமிடையில் எப்படியான உறவிருந்தது அல்லது ஏதாவது உறவிருந்ததா என்பதை, பொலிசாரின் விசாரணை முடிவடையும் வரை நாம் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாது.
ஆனால், உயிரிழந்த இருவருடைய பிரேத பரிசோதனை முடிவுகளையும், அதன் வழி- சில சாத்தியங்களையும் குறிப்பிடலாம்.
உயிரிழந்த இருவருக்குமிடையில் தவறான பாலியல் உறவிருந்தது என பரவிவரும் தகவல்கள் பொய்யானவை என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.
யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அது சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகியுள்ளது.
இந்த பரிசோதனைகளுடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவருடன் பேசிய போது, சமூகத்தில் பரவிய வதந்திகளை நிராகரித்தார்.
உயிரிழந்த யுவதி முழுமையான கன்னிகையென்பது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் இருவருக்குமிடையில் ஏதேனும் உறவிருந்ததா என்பதை விசாரணைகளின் பின்னர் பொலிசார் வெளிப்படுத்துவர்.
ஆயினும், இருவருக்குள்ளும் ஏதேனும் வகையான உறவிருக்க சாத்தியமிருப்பின், அது- பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில்- தூய காதல் உறவாக மட்டுமே இருக்க முடியும்.
இது தொடர்பாக குறித்த இரு குடும்பங்களின் உறவுகள் மற்றும் நெருங்கிய நட்புக்கள் யாரேனும் சிலருக்கு நிச்சயம் தகவல்கள் தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் பொலிசாருக்கோ அல்லது ஏனைய தரப்புக்களுக்கோ மறைக்க கூடும்.
குறித்த யுவதி நிலக்சனாவுடன் கஜேந்திரன் தனிமையான இடத்தில் இருக்கும் போது யாரேனும் சிலரால் அந்தக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு அவற்றை வைத்து அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களா? அல்லது கஜேந்திரனிடம் அச்சுறுத்தி பணம் பறிக்க முற்பட்டார்களா? என்ற கோணத்திலும் ஆராயப்படல் வேண்டும்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய நிலக்சனா இவ்வாறு கஜேந்திரனுடன் கள்ளக்காதலில் ஈடுபடும் விடயம் நிலக்சனாவின் உறவுகளுக்கு தெரியவந்ததால் அவளை வேலைக்கு செல்ல விடாது உறவுகள் எச்சரித்து நிறுத்தியிருப்பார்கள்.
இவ்வாறான நிலையில் நிலக்சனா உயிரை மாய்த்தாரா? நிலக்சனா உயிரை மாய்த்த பின்னர் இதற்கு காரணமான கஜேந்தினிடம் நிலக்சனாவின் உறவுகள் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தார்களா?? என்பனை தொடர்பாக ஆராயப்படல் வேண்டும். கஜேந்திரன் மற்றும் நிலக்சனாவின் தொலைபேசிகள் ஆராயப்பட்டால் பெரும்பாலும் உண்மைகள் வெளியே வர வாய்ப்புள்ளது.
மிகப் பெரும் கோடீஸ்வரரான ஒருவரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய ஒரு படித்த யுவதியும் மிகப் பெரும் ஆபத்தான அல்லது மானம் போகின்ற ஒரு செயற்பாடு நடந்தாலோ அல்லது நடக்கப் போவதாக எண்ணினாலோ தவிர இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை ஒரு போதும் எடுத்திருக்க மாட்டார்கள்.