காங்கேசன்துறை வீதியில் உப்புமடம் சந்திக்கு அருகில் இன்று இரவு நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இரவு 9 மணியவில் நடந்துள்ளது.
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரெனத் திறக்கப்பட்டால் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அதனுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார் என்று சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
தாவடியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க லோகராசா தர்சன் என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார். அவர் மேசன் தொழிலாளி என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த சுன்னாகம் பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்துக்கு காரணமான காரினை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் கூடியவர்கள் முரண்பட்டனர்.
உரிய விசாரணைகள் இடம்பெறாது சடலத்தை அப்புறப்படுத்தியதுடன் விபத்துக்கு காரணமான காரினை பொலிஸார் எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர். அதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
அத்துடன், காரின் சாரதி பொலிஸில் சரண்டைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.