தெமட்டகொடை தலைமை பொறியியலாளர் தலைமையகத்திற்குள் சிகரெட் புகைத்தவாறு பிரவேசித்த புகையிரத உப கட்டுப்பாட்டாளர் மற்றும் புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான வாயிலில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் சாதாரண உடையில் சிகரெட் புகைப்பதை பார்த்து அந்த நபரிடம் புகைபிடிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இதன்போது சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த நபர், தான் ரயில்வே உப கட்டுப்பாட்டாளர் எனக்கூறி அவரது அடையாளத்தை வெளிப்படுத்த தனது அடையாள அட்டையை புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் முகத்தில் வீசியுள்ளார்.
புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் தாக்கப்பட்டதை பல ஊழியர்கள் பார்த்தபோது, சார்ஜென்ட்டை தாக்கிய நபரை உடனடியாக பிடித்து அவரையும் தாக்கியுள்ளனர்.
புகையிரத பாதுகாப்பு சார்ஜன்டை தாக்கியதாக கூறப்படும் உப கட்டுப்பாட்டாளர் அப்போது சீருடை அணிந்திருக்கவில்லை என திணைக்கள வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இந்த ரயில்வே உப கட்டுப்பாட்டாளர் அண்மையில் சேவையில் இணைந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்கள் அங்கு பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட பணிப்புறக்கணிப்பால் இன்று (04) மாலை முன்னெடுக்கப்படவிருந்த அனைத்து அலுவலக ரயில் சேவைகளையும் இரத்து செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.