நாளை ஆகஸ்ட் 30 – சர்வதேச காணாமல் போனோர் தினம்

வடக்கு கிழக்கில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டடோர் தினம் நாளை ஆகஸ்ட் 30 அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30 ம் திகதி சர்வதேச காணாமல் போனோருக்கான தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு காரணங்களுக்காக இராணுவத்தினராலோ அல்லது பாதுகாப்பு படையினராலோ கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் இரகசிய கைதுகளை தடுக்கவும் அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவுமே இதற்கான நாள் ஒன்று உருவாக்கப்பட்டது.

இதன் உருவாக்கத்தின் பின்னணியில் இலத்தீன் அமெரிக்க நாடான கொஸ்டரிக்கா உள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் வலிந்து காணாமலாக்கப்படுதலை (forced disappearance) ஒரு அரசியல் அடக்கு முறையாக பாவித்த நாடுகளில் முதலிடத்தை இலத்தீன் அமெரிக்க நாடுகள் பெறுகின்றன.

இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தில் இரகசிய கைதுகள், முகாம்களில் அடைத்து வைத்தல், சித்திரவதைகள் போன்றவற்றிற்கு காரணமாக ஜேர்மனியின் நாசி படைகள் இருந்ததை உலகம் அறியும். அதே போன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளான கொஸ்டரிக்கா, வெனிசுவேலா, பெரு, ஆர்ஜன்டீனா, உருகுவே, சிலி, பிரேஸில் ஆகிய நாடுகளில் 1980 களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தன.

நாளை ஆகஸ்ட் 30 – சர்வதேச காணாமல் போனோர் தினம்

இதை தடுப்பதற்கு கொஸ்டரிக்காவில் இயங்கி வந்த FEDEFAM என்ற அரச சார்பற்ற அமைப்பு முதன் முதலாக குரல் கொடுத்திருந்தது. பின்னர் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன தமது கவனத்தை திருப்பியிருந்தன. எனினும் இன்று உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு காரணங்களுக்காக காணாமல் போனோரின் தொகை அதிகரித்து வருகிறது.
உலகில் இடம்பெற்ற சில மோசமான காணாமல் போக செய்த சம்பவங்களாக,

1.ஆர்ஜெண்டீனா : 1976 – 1983 காலப்பகுதியில், 30,000 பேர் கடத்தப்பட்டார்கள். அகதிகளுக்கான முகாம்களில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். போதை மருந்துக்கு ஊக்கப்படுத்தப்பட்டார்கள்.

சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு விமானங்களிலிருந்து ரியோ டெல பிளட்டா நதிக்குள் வீசப்பட்டார்கள். 1983ம் ஆண்டு ‘நேஎநச யுபயin’ எனும் கமிஷன் ஆரம்பிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுக்கள் அன்றைய ஜுந்தா இராணுவ ஆட்சியாளர்களின் மீது சுமத்தப்பட்டன. 20 வருடங்களுக்கு பிறகே இதற்குரிய தண்டனை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு கிடைக்கப்பெற்றது.

2. போஸ்னியா : 1991 – 1995 காலப்பகுதியில், 10,000 ற்கு மேற்பட்ட போஸ்னியர்கள் காணாமல் போனார்கள். போஸ்னிய – சேர்பிய – யூகோஸ்லாவிய யுத்தத்தில் இப்பேரவலம் நடந்தது.

3. கம்போடியா : 1975 – 1979 காலப்பகுதியில், கிமெர் ரூஜ் ஆட்சிக்காலத்தில், 1.7 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள். அண்மையில் கிமெர் ரூஜ் தலைவர்கள் மூவருக்கு இதற்குரிய தண்டனை வழங்கப்பட்டது.

4. ஈராக் : அமெரிக்கா 2003ம் ஆண்டு படையெடுப்பை தொடக்கி கடந்த வருடம் முடிவடையும் வரை நடத்தி முடித்த யுத்தத்தில் ஈராக்கில் 15,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

5. கொரியா : 1950 – 1953 காலப்பகுதியில் நடைபெற்ற கொரிய யுத்தத்தில், 86,000 தென்கொரியர்கள் வடகொரியாவால் கடத்தப்பட்டனர்.

6. இலங்கை : இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு முடிவுற்ற சிவில் யுத்தத்தின் பின்னரும், அதற்கு முன்னரும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இவற்றை விட ஆர்மெனியா, பாகிஸ்தான், துருக்கி, பிரேசில், சிலி, சஹாரா, உகண்டா, கொசோவா, ரஷ்யா, செனகல் என மேலும் பல நாடுகளில் காணாமல் போதல் சம்பவங்களில் கணிசமாக நடந்துள்ளன.

இதன் பின்னணியில் கூடுதலாக அரசியல் காரணங்களே விளங்குகின்றன. எனினும் எந்த அரசாங்கமும் அதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதோடு காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை அவர்களின் உறவினர்களுக்கு தெரியபடுத்துவதிலும் அக்கறை காட்டுவதில் பின்னிற்கின்றன அல்லது அது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் இழுத்தடிப்பகளை செய்து வருகின்றன.

இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. மூன்று தசாப்த கால யுத்த காலத்தில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலாக இறுதி யுத்த காலகட்டத்தில் இத்தொகை அதிகம். காணாமல் போனோரின் உறவினர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் காணாமல் போனோருக்கான அலுவலம் ஒன்றை ஸ்தாபித்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளவும் விசாரணைகளை மேற்கொள்ளவும் ஆணைக்குழுவொன்றையும் நியமித்தது.

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகமானது வடக்கு கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டிற்கும் உரித்துடையது ஆகவே அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இதன் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தமை முக்கியமானது.

அதாவது யுத்தகாலப்பகுதியில் இருதரப்பிலும் காணாமல் போயிருந்தனர் என்ற விடயம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. எனினும் யுத்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே காணாமல் போன மக்கள் தொகையே அதிகமாக பதிவாகியுள்ளது.

அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய வருவோர் தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே அதிக அக்கறை காட்டுகின்றனர். இதன் காரணமாகவே பலர் இறப்புச் சான்றிதலை பெறுவதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மட்டுமன்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு சிலரின் தகவல்கள் இதுவரை தெரியாதிருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சொத்து விவகாரம் மற்றும் பிள்ளைகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்கான சட்ட ரீதியான நகர்வுகளுக்காக ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே பல உறவினர்கள் இறப்பு சான்றிதழை பெற்றிருக்கின்றனர் என்பது வேதனையான விடயம்.

குறிப்பாக கணவனை இழந்த மனைவிமார், பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் தாய்மார்கள், சகோதரர்கள் இவ்வாறு இறப்பு சான்றிதழைப் பெற்றிருக்கின்றனர். முறைப்பாடு செய்து சுமார் 15 வருடங்கள் கழிந்த நிலையில் பலர் இந்த சான்றிதழைப் பெற்றுள்ளனர் என்பது முக்கிய விடயம்.

2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக 6025 முறைப்பாடுகள் உட்பட 2023 மே மாதம் வரையில் மொத்தமாக 21374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன இதில் 6386 முறைப்பாடுகள் படையினர் தொடர்பானதாக இருப்பதாகவும் 14988 ஏனையோருடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரைக்கும் 3819 பேருடைய முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டுள்ளதுடன் 1283 பேருக்கான சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக காணாமல் போனோருக்கான அலுவலகம் கூறுகிறது.

அச்சமூட்டும் மனித எச்சங்கள் யுத்த காலப்பகுதியில் சந்தேகத்தின் பேரிலேயோ அல்லது விடுதலை புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பலரின் தகவல்கள் இன்னும் வெளிவராமலிருக்கும் நிலையில் இவர்கள் வெவ்வெறு இடங்களுக்கு கொண்டு சென்று கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் இன்னும் அவர்களின் உறவினர்களுக்கு உள்ளது.

இந்நிலையில் 2014ம் ஆண்டு மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப்புதைகுழி மற்றும் 2023ம் ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழி ஆகியன காணமால் போனோரின் உறவினர்களிடயே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளமை என்னவோ உண்மை.

இதுவரை கிடைத்துள்ள எண்ணிக்கைளை அடிப்படையாக வைத்துப்பார்க்கும் போது உலகில் அதிகம் காணாமல் போனோர் பதிவான நாடாக இலங்கை உள்ளதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 12 இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் காணாமல் போனோர் தொகை குறிப்பிட்ட காலப்பகுதியில் 90 ஆயிரமாக இருக்கும் போது இலங்கை போன்ற சிறிய தீவில் காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகமாகும்.

யுத்த காலத்து மக்கள் குடித்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதை பற்றி ஆராய்தல் அவசியம்.

மேலும் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மற்றும் மன்னார் மனித புதைக்குழி போன்று இன்னும் எத்தனையோ வெளிப்படாமலிருக்கும் இடங்கள் வடக்கு கிழக்குப்பகுதிகளில் இருக்கலாம்.

அவற்றை எவ்வாறு இனங்காண்பது மேலும் இதுவரை கிடைத்திருக்கும் முறைப்பாடுகளுக்கு அமைய அடுத்தகட்ட விசாரணைகள். எவ்வாறு முன்னெடுப்பது என்பதிலேயே காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் வெற்றி தங்கியுள்ளது.

ஆகஸ்ட் 30 ஆகஸ்ட் 30 ஆகஸ்ட் 30 ஆகஸ்ட் 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here