யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் நேற்று பழ வியாபாரி ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 வயதான பழ வியாபாரி ஒருவர் வாகனத்தில் வந்த இனந்தெரியாத கும்பலால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டார் என்று உறவினர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
12 பேர் கொண்ட குழுவே பழ வியாபாரியைக் கடத்தியது என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேரைக் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கனகாம்பிகைக்குளம், பரந்தன், கரடிப்போக்குச் சந்தி ஆகிய இடங்களைச் சேர்ந்த 23 வயதுக்குட்பட்ட ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாகவே இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது என்று பழ வியாபாரியின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோர் தேடப்படுகின்றனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.