பல நாள்களாகப் பொலிஸாருக்குத் தண்ணீர் காட்டி வந்த சந்தேகநபர் ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திக் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (ஒக்ரோபர் 10) நடந்துள்ளது. முழங்காலுக்குக் கீழ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அல்வாயைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டார். பல்வேறு இடங்களில் நடந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இவர் தேடப்பட்டு வந்தார்.
சந்தேகநபர் அல்வாயில் உள்ளார் என்று கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் குழு ஒன்று அவரைக் கைது செய்ய இன்று சென்றுள்ளது. பொலிஸாரைக் கண்ட சந்தேகநபர் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.
அவரைக் கட்டுபடுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பொலிஸார் கைது செய்ய முயன்ற சந்தர்ப்பங்களிலும் சந்தேகநபர் பொலிஸார் மீதுமும், பொலிஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார் என்று கூறப்படுகின்றது.
முழங்காலுக்குக் கீழ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.