யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்காரர்களின் கொடுமை காரணமாக இளம் தாய் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (04-09-2023) இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தாயாரான யாழ் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 34 வயதான ஜெயராஜா அருள்பாலினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மீட்டர் வட்டிக்கு பலரிடம் பணம் பெற்று பறவை விற்பனைத் தொழிலை செய்து வந்துள்ளதாகவும், கடனை திரும்ப செலுத்த தவறிய நிலையில் அவர்களினால் வீடு, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், வான் என்பன பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
வட்டிக்காரர்களின் கொடுமையால் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையிலும் மீட்டர் வட்டிக்காரரின் அடாவடி அதிகரித்துள்ளது.
இவ்வாறான அடாவடித்தனத்தை தன்னால் பொறுத்துக் கொள்ள இயலாது எனவும் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கணவனிடம் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்தை பொருட்படுத்தாத கணவன் வெளியில் சென்று விட்டு பின்னர் வீட்டுக்கு வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி காணப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பெண் மரணம் தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
மரண அறிவித்தல்
காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் மானிப்பாய் வீதி ஒட்டுமடத்தை வசிப்பிடமாக கொண்ட ஜெயராஜா அருள் பாலினி அவர்கள் நேற்று 04-09-2023 தூக்கில் தொங்கி அகால மரணமடைந்தார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 05-09-2023 செவ்வாய்க்கிழமை இன்பம் மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்க பட்டு மதியம் ஒரு மணியளவில் இறுதி கிரியைகள் இடம் பெற்று கோம்பாயன் மணல் சுடலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.