யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் (27.09.2023) புதன்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது , படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
தப்பி சென்றவர்களில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று படகினை சோதனையிட்ட போது படகில் மூன்று உரைப்பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட கஞ்சாவின் தொகை சுமார் 125 கிலோ கிராம், எனவும் தம்மால் கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும், யாழ். காரைநகர் – மருதபுரம் பகுதியில் இரண்டரை கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்நேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (27.09.2023) காரைநகர், மருதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
காரைநகர் – மருதபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.