35 ஆண்டுகளின் பின் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவு!

ஒவ்வொருவருக்கும் பாடசாலைக் காலத்தில் நடந்த பசுமையான நிகழ்ச்சிகளை நினைத்து பார்த்தால் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. படித்து முடித்து பல ஆண்டுகள் ஆன பின்பு வகுப்பு தோழர்களை, தோழிகளை சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் ஆனந்தம் அலாதியானது. அந்த வகையில் இப்போது பல பாடசாலைகளில் ரி யூனியன் என்ற பெயரில் பாடசாலை நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு நாள் முழுவதும் கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களும், மாணவிகளும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டனர். இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவரும், இடுக்கி பகுதியை சேர்ந்த மாணவியும் கலந்து கொண்டனர்

இவர்கள் இருவரும் பாடசாலையில் படித்த காலத்தில் காதல் வசப்பட்டு இருந்தனர். எனினும், குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், இருவருக்கும் வேறுவேறு திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்பு அவர்களுக்கென குடும்பம், குழந்தைகளும் பிறந்து விட்டனர்.

இந்த நிலையில் தான் இவர்களின் வகுப்பு தோழர்கள் சேர்ந்து பாடசாலையில் ரி யூனியன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் எர்ணாகுளம் மாணவரும், இடுக்கி மாணவியும் கலந்து கொண்டனர்.

50 வயதை நெருங்கி விட்ட வகுப்பு தோழர்கள் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பறையில் சந்தித்து கொண்டனர். அங்கு எர்ணாகுளம் மாணவரும், இடுக்கி மாணவியும் வகுப்பறை பெஞ்சில் அமர்ந்திருந்த போது அவர்களுக்கு பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல் உணர்வு எட்டி பார்த்தது. உருகிபோன இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கண்களாலேயே பேசிக்கொண்டனர். இருவருக்கும் தனித்தனியாக திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கும் நிலையில் முதல் காதலின் நினைவை மறக்க முடியாமல் தவித்தனர். இந்த தவிப்பை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது ஏற்பட்ட ஆர்வத்தில் ரி யூனியன் நிகழ்ச்சியில் இருந்து இருவரும் சந்தடியின்றி வெளியே வந்து தனியாக பேசத்தொடங்கினர்.

ரி யூனியன் நிகழ்ச்சி முடிந்த போது இருவரும் பாடசாலையில் இருந்து மாயமாகி இருந்தனர்.

ரி யூனியன் நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை தேடிய போதுதான் இருவரும் சேர்ந்தே மாயமாகி இருப்பது தெரியவந்தது

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

இதுபற்றி எர்ணாகுளம் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜோடியை தேடி வருகிறார்கள்.