பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் நிதர்சனா என்ற 15 வயது மாணவி 8 மணித்தியாலங்கள் மற்றும் 30 நிமிடங்களில் 54km தூரத்தினை நடந்து – கடந்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இருந்து காலை 06:05 மணிக்கு தொடங்கப்பட்ட சோழன் உலக சாதனை படைப்பதற்கான நடைப் பயணம், கினிகத்தேன, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ நகரங்கள் ஊடாக, நண்பகல் 02. 35 மணியளவில் பொகவந்தலாவை சென் மேரிஸ் தேசிய கல்லூரியில் நிறைவடைந்தது.
அதிக ஏற்றக்கோணம் கொண்ட மலையக பாதையில் இவர் எந்தவித ஓய்வும் இன்றி நடந்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
இவ்வுலக சாதனை முயற்சியை தொடக்கம் முதல் இறுதி வரை கண்காணித்து உலக
சாதனையாக உறுதி செய்தார்கள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின்
இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஸ்குமார் மற்றும் கண்டி பொதுச் செயலாளர் சடையாம்பிள்ளை சந்திரமோகன் போன்றோர்.
சோழன் உலக சாதனைப் படைத்த மாணவிக்கும் அவரது மூன்று சகோதரிகளுக்கும் தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
சோழன் உலக சாதனை படைத்த மாணவியை கல்லூரியின் தலைமை ஆசிரியர் வேலுசாமி அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரிமா சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.