யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து, 3 மாடி கட்டிடத்திலிருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளான்.
காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக வைத்தியசாலை வட்டரங்களில் இருந்து அறிய முடிகிறது.
இன்று நண்பகல் குறித்த மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் பாடசாலையிலுள்ள மாடிக் கட்டிடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்துள்ளான். எனினும், பாடசாலைக்கான மின்மார்க்க வயர்களில் சிக்குண்டதன் காரணமாக மாணவன் நேரடியாக நிலத்தில் விழாததால் உயிராபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
சக மாணவர்காளலும், ஆசிரியர்களாலும் மீட்கப்பட்ட மாணவன் உடனடியாக அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
மாணவன் தற்கொலை முயற்சிக்கு முன்னதாக 7 பக்கங்கள் கொண்ட கடிதமொன்றை எழுதி புத்தகப் பையில் வைத்திருந்துள்ளான். அந்த கடிதம் மீட்கப்பட்டது.
நிகழ்நிலை மற்றும் கணினி விளையாட்டுகளில் ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டின் காரணமாகக் குறித்த மாணவன் அண்மைக் காலமாக உள நெருக்கீட்டுக்கு ஆளாகியிருந்ததாகவும், இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுத் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தினால் காயமேற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.